Saturday, March 10, 2012

ஒற்றைப்பனைமரம்



நிலாவரக்கிணற்றில்
கல்லெறிய ஆசை
அதன் ஆழம் சென்று
திரும்பிவர ஆசை

நெய்னாதீவுக்கு
நீந்திச்செல்ல ஆசை
அதன் நெடுகினில்
மீன்பிடிக்க ஆசை

காங்கேசன் துறையில்
குளிர்காய ஆசை
அதில் நிமிர்ந்துநிற்கும் மரநிழலில்
தங்கிவிட ஆசை

தென்னைத்தோப்புக்குள்
ஒழிந்து கொள்ள ஆசை
அதன் இளநீரைப்பறித்து
பருகிவிட ஆசை

தோட்டக்காரன் தடியெடுத்து
துரத்த ஆசை
நான் அவர்முன் தொடர்ந்து
ஓட ஆசை

ஓடில்லா கூரையால்
வானம்பார்க்க ஆசை
அதன் துண்டுகளை
உதட்டில் ஒட்ட ஆசை

ஓட்டைச்சுவர்களை
தடவிப்பார்க்க ஆசை
அதன்வழியே பச்சிலைகளை
பார்க்க ஆசை

ஓணான் பிடித்த வேலியை
ஒருமுறைபார்க்க ஆசை
அது ஒற்றைக்கம்புடன்
நிற்பதைக்காணவும் ஆசை

மண்ணின் புழுதியில் உருண்டு
விளையாட ஆசை
அதன் வாசனைகளை
முகர்ந்துகொள்ள ஆசை
அதனோடு கூடிவிளையாடிய
தோழனைக்காணவும் ஆசை

ஒற்றை பனையோடு
கதைகள் பேச ஆசை
அவைகளுள்ள தீவுகள்தான்
ஆசையோ ஆசை

ஓலைக்குடிசையில்
உறங்கிட ஆசை
அதன் தேவதைதான்
என் ஆசை

நிஜங்களை நினைத்துப்
பார்க்க ஆசை
அது நிழலாகிப்போனதை
நினைக்கையில்...
நெஞ்சினில்
ஒப்பாரியின் ஓசை.....

கல்லில் சாய்ந்துபோனது
பனைமரமல்ல
எனது பாரம்பரியமான
ஆசைகளும்தான்

தோப்பிலிருந்து தனித்து நின்ற
ஒற்றை பனையானாலும்
மண்ணின் எழுச்சி
உயரத்தில் தெரிந்தது

நான் தனித்து நிற்கும்
ஒற்றை பனை
என் ஓலைகள் உங்களை
வசிறி விடும்.....

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...