முழுத் தூக்கம்
முழுமை பெற்று
பல வருடங்களாகின்றன
கடமையழைக்க
களைந்த தூக்கம்
கனவுகள் பல இருந்தும் - அதை
காற்றோடு கரைத்து விட்டு
காலத்தின் முகவரியை
தேடியலைகிறோம்
இப்பாலைவனத்தில்
வந்தாரை வாழவைக்கும்
வல்லவன் கிருபையால்-இங்கு
எல்லாமே இருந்தும்
ஏதும் இல்லாமலேயே
வாழ்கிறோம் நாங்கள்
வாரத்தில் ஒரு நாள்
சிந்திய கண்ணீரை
சொந்த சுமையாக்கி
துன்பம் மறைத்து
உரையாடுவோம் உறவுகளோடு
எம் இதயம்
அழுவது யாருக்கு கேட்கும்
வேண்டாத வாழ்கையை
விலை கொடுத்து
வேண்டித்தான் வந்திருக்கிறோம்
விதி செய்த விளையாட்டிதுவோ...?
ஆறு தசாப்த வாழ்கையை
அரைகுறையாய் வாழ்ந்தென்ன பயன்
சொந்த நாட்டில்
சொந்தங்களோடு
பழு சுமந்து வாழ்தாலும்
பல கோடி இன்பம் அதில் உண்டடா
இனியும் வேண்டாமடா
இந்த இம்சை வாழ்கை
இனிதே தொடரட்டும்
எம் தேசத்து வாழ்கை
ஆக்கியோன்
சின்னப்பாலமுனை பாயிஸ்
No comments:
Post a Comment